இலங்கை முஸ்லிம்களை ரோஹிங்கியரை போன்று ஆக்கும்வரை ஹக்கீமின் வியாபாரம் தொடரும்


மாமனிதர் மர்ஹூம் அஷ்ரபின் கிழக்கு மாகாண முஸ்லீம்களின் சுயநிர்ணயம் தொடர்பாக, கொள்கையியல் ரீதியான கருத்தில் “வடக்கு கிழக்கு இணைவை எமது முஸ்லீம் சமூகத்தின் முதுகில் மேல் எழுதப்பட்ட அடிமைச் சாசனம்” என்றதோடு, இதற்கு தீர்வாக இணைந்த வடகிழக்கில் நிலத் தொடர்பற்ற தென்கிழக்கு மாகாண அலகும், இணையாத வடக்கு கிழக்கில் கல்முனை கரையோர மாவட்டமும் முஸ்லீம்களுக்கு தரப்பட வேண்டும் என்ற உறுதியான கோரிக்கையினை முன்வைத்தே 1988 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆர் . பிரேமதாசாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வீடமைப்புத் திட்டத்தின் மூலம் வீடுகளுடன் மற்றும் வாக்களிப்பில் 12.5 வீதமாக இருந்த விகிதாசார வெட்டுப் புள்ளியை 5 வீதமாக மாற்றியமைத்து முஸ்லீம்களின் பேரம் பேசும் சக்தியை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் செயற்படுத்திக் காட்டினார்.



சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சி உட்பட பல சம்பவங்களின் அனுபவ அடிப்படையில், பல வகையான கோணங்களில், சமூகத்தை நோக்கிய சிந்தனைகளில், உரிமைகளின் குரலாக பக்குவமாய் செயற்பட்ட ஹஸனலிக்கு, இவற்றிக்கு எதிர்மறையாகவும், பாராமுகமாகவும் செயற்பட்ட ஹக்கீமுடன் நீண்ட காலமாக முரண்பாடுகள் காணப்பட்டதனால், ஹஸனலியை ஹக்கீம் அவரது சுயநல வளர்ச்ச்சிப் பாதைக்கு தடையாக ஒரு மூக்கணாங் கயிறாகவே கருதினார்.



பெரும் பான்மையில் எந்தக் கட்சி ஆட்சியமைக்கின்றது என்பது பற்றி ஹஸனலி ஒரு போதும் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் முஸ்லீம் காங்கிரசின் உதவியால் எந்தக் கட்சி ஆட்சியமைக்கின்றதோ, அக்கட்சியின் மூலம் எமது சமூகத்துக்கு ஆகக் கூடிய பயனையும், நலனையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்த ஹஸனலி, அக்கட்சிகளோடு முறையான, எழுத்து மூலமான ஒப்பந்தங்களை செய்வதிலேயே குறியாக இருந்தார். ஒப்பந்தம் சரியாயின் அக்கட்சியுடன் இணைந்து செயற்படுவதுடன் தேர்தலுக்கும் முகம் கொடுப்பது அல்லது ஆதரவு வழங்குவது, இல்லையேல் தனித்து இயங்குவது, இது தான் இவ்வளவு காலமும் ஹஸனலியின் கொள்கையாகவும், நடவடிக்கையாகவும் இருந்தது, ஆனால் கொள்கை ரீதியாகவும், செயற்பட்டு ரீதியாகவும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் ஹஸனலிக்கும் ஹக்கீமுக்கும் இடையில் காணக் கூடியதாக இருந்தததை ஹக்கீமாலும் மறுக்க முடியாது,
இந்தக் காலப் பகுதியில் தான் அதிகமான சட்டத் திருத்தங்களும், இணைப்புகளுடன் தேர்தல் மாற்றங்களும் அரசினால் மேற் கொள்ளப்பபடுவதோடு இதற்கான அறுவடைகள் அதிகமான விளைச்சளைத் தரும் என்ற விடயத்தினை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த ஹக்கீம், ஹஸனலி, பஷீர் சேகுதாவூத், அன்ஸில் போன்றவர்களால் பல தடங்கல்களும், தடைகளும் ஏற்படுத்தப்படும் என நினைத்து “சமூகத்தை மறந்த நிலையில்” சகலரையும் திட்டமிட்டு கட்சியை விட்டு வெளியேற்றினார்.



பின்னர் நடந்த கண்டிக் கூட்டத்தில் ஹக்கீம் இரு வருடங்கள் தாற்காலிகமாகவே செயலாளரை மாற்றுகிறேன் என்று உள்ளக்கிடக்கையை அவரை மறந்து கூறியதை நினைத்துப் பாருங்கள்
இன்று ஹக்கீமை எதிர்த்து நியாயத்தைப் பேச எவருமில்லை, உயர்பீடத்தில் இருப்பவர்களில் ஹக்கீமின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் போக ஏனையவர்கள் வாய் செத்தவர்கள். ஹக்கீம் ஒரு தனிக்காட்டு ராஜாவாக தன்னை ஆக்கிக் கொண்டதனால், எந்த விதமான ஒப்பந்தங்களுமின்றி ஹக்கீம் நினைத்தபடி காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். முஸ்லீம்களுக்கு பாதகமானது என்று தெரிந்தும் 20 வது திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் வெற்றியடையச் செய்யப்பட்டதுடன், பாராளு மன்றத்திலும் முஸ்லீம் காங்கிரஸின் ஆதரவான வாக்களிப்பின் மூலமாக 50 க்கு 50 திருத்தச் சட்டமூலம் 2 /3 பெரும் பன்மையைப் பெற்று வெற்றி பெற்றது. இங்கும் முஸ்லீம் காங்கிரஸ் வரலாற்றுத் தவறையே இளைத்துள்ளது எனலாம்.



இவ்வாறு எமது சமூகத்தினை விற்று, பலிக்கடாவாக்கி சிறு பான்மையினரை பெரும் பான்மைக் கட்சிகளுக்கு அடிமைகளாக மாற்ற உதவும் ஹக்கீமின் உயரத்திற்கும் மேலாக சன்மானங்கள் குவிந்தாலும், இந்நாட்டு முஸ்லீம்கள் (கிழக்கு உட்பட) ரோஹிங்கிய முஸ்லீம்களைப் போல் அகதிகளாக நடுத்தெருவுக்கு வரும் வரை இது போன்ற வியாபாரங்கள் ஹக்கீமால் நடந்து கொண்டே இருக்கும்.


18 வது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்க மறுத்த ஹஸனலியிடம், ஹக்கீம் “மஹிந்தைக்கு வாக்கு கொடுத்து விட்டேன்” என்னைக் காப்பாற்றுங்கள் என காலில் விழாத குறையாக கெஞ்சிக் கூத்தாடி ஹஸனலியை அழைத்த போது ” நீங்களும் எமது கட்சியும் செய்யப் போவது, எமது முஸ்லீம் சமூகத்துக்கான வரலாற்றுத் துரோகமாகும், இதற்கு நீங்கள் நிச்சயமாக மறுமையில் பதில் சொல்ல வேண்டிவரும்” என ஹஸனலி சாபமிட்டதை ஹக்கீம் மறந்திருக்க மாட்டார். சிராணி பண்டார நாயக்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்க ஹஸனலியை ஹக்கீம் எவ்வளவோ அழைத்தும் ஹஸனலி தவிர்ந்து கொண்டதுடன், ஹக்கீமையும் தடுத்தார். ஆனால் ஹக்கீம் மஹிந்தவுக்கு ஆதரவாக, அதாவது சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக வாக்களித்தார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது எந்த விதமான ஒப்பந்தமும் இன்றி மஹிந்தவுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் விடயத்தில் ஹக்கீமின் தொல்லை தாங்க முடியாத ஹஸனலி இரு நாட்கள் மறைவானதோடு, முஸ்லீம் காங்கிரஸில் போட்டியிடும் சூழ் நிலையினை உருவாக்கி வெற்றியும் கண்டு, முதலமைச்சரையும் பெற செயற்பட்டார். அதே போன்று தான் ஜனாதிபதித் தேர்தலிலும் ஹக்கீம் மஹிந்தவுக்கு ஆதரவளிக்க பல முயற்சிகளைச் செய்தும் அதற்கு ஹஸனலி இணங்காது கிழக்கு மக்களின் மனநிலைக்கு மதிப்பளித்து, கிழக்கு மக்களோடு சேர்ந்து மைத்திரிக்கு ஆதரவளித்து ஆட்சி மாற்றத்தினை கொண்டுவர முன் நின்றதுடன், மைத்திரி ரணில் அரசில் கெபினெட் அமைச்சுக்கு உள்வாங்கப்பட்ட ஹஸனலியின் பெயர், ஹஸனலியின் விட்டுக் கொடுப்பால் ஹக்கீமுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டதையும் யாராலும் மறுக்க முடியாது.



இன்றும் கூட ஹஸனலி முஸ்லீம் காங்கிரஸில் இருந்திருந்தால் இந்த 20 வது திருத்தச் சட்ட மூலம் மாகாண சபையில் இருந்து வாக்கடுப்பே இல்லாது அகற்றப் பட்டிருப்பதுடன், பாராளுமன்றத்திலும் 50 க்கு 50 திருத்தச் சட்டமூல வாக்கெடுப்பிற்கு ஆதரவாக முஸ்லீம் காங்கிரஸ் கையுயர்த்தக் கூடாது என ஹஸனலி தடையாகவும் இருந்திருப்பார்.



ஹஸனலி இல்லாத படியால் ஹக்கீம் கிடைக்கின்ற பக்கமெல்லாம் துள்ளுகின்றார். பொய்யாலும், புரட்டலும், நடிப்பாலும் கிழக்கில் உள்ள முஸ்லீம்களை தினமும் ஏமாற்றி முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார். இதற்கு 25 வீதமே ஹக்கீம் பொறுப்பு என்றாலும் மிகுதி 75 வீதமும் கிழக்கு மாகாண உயர்பீட உறுப்பினர்களே பொறுப்புக் கூற வேண்டும் என்பது ஹஸனலியின் வாதமாகும். இப்போதாவது விளங்குகின்றதா? ஹஸனலியின் தரப்பில் உள்ள நியாயம் என்னவென்றும், ஹஸனலியின் பெறுமதி என்னவென்றும்.

(அமீர் மௌலானா)
vanninews.lk
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.